Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டு பள்ளிகளில் ஒரு புதுமை அரங்கேறவுள்ளது. வகுப்பறைகளில் இருக்கைகளை ப வடிவில் போடுமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே நீண்ட காலமாக ஒரு முரண் இருந்து வருகிறது. அதுகுறித்து சமீப காலமாகத்தான் கவனம் கொடுக்கப்பட்டு வந்தது. அதாவது வகுப்பறைகளில் இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டிருக்கும். முன்வரிசை முதல் பின்வரிசை வரை இந்த இருக்கைகள் இருக்கும்.
இதில் பேக் பெஞ்ச் எனப்படும் கடைசி வரிசை இருக்கைகளில் உயரமான மாணவர்கள் அமர வைக்கப்படுவர். மேலும் சரியாக படிக்காத மாணவர்களும் இந்த பெஞ்ச்சில்தான் இருப்பார்கள். இப்படித்தான் இத்தனை காலமாக இருந்து வருகிறது. இதில் பேக் பெஞ்சர்ஸை முரட்டு மாணவர்கள் என்றும், உருப்படாதவர்கள் என்றும் சொல்வதை நமது சமூகம் இத்தனை காலமாக தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டுதான் வந்துள்ளது. ஆனால் நிஜத்தில் வாழ்க்கையில் சாதித்தவர்களை எடுத்துக் கொண்டால் அதில் பேக் பெஞ்சர்ஸ்தான் அதிகம் இருப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது இதில் ஒரு மாற்றம் வர ஆரம்பித்துள்ளது. அதாவது வகுப்பறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கைகளைப் போடுவதற்குப் பதில் ப வரிசையில் இருக்கைகளைப் போட்டு மாணவர்களை அமர வைப்பதால் உளவியல் ரீதியாக மாணவர்களிடையே நல்லதொரு மன நிலையை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மாணவ, மாணவியரின் கற்பித்தலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கேரளாவில் பள்ளிகளில் இந்த மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது அதே மாற்றத்தை தமிழ்நாட்டு பள்ளிகளும் காணவுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இதுதொடர்பாக ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், வகுப்பறைகளில் அனைத்து மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும், இனி பேக் பெஞ்ச் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.