சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

Su.tha Arivalagan
Mar 24, 2026,10:48 AM IST

புதுடில்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என்றும் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவின. இதன் ஒரு பகுதியாக, தட்டுப்பாட்டைச் சமாளிக்க தற்போதைய 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களின் எடையை 10 கிலோவாகக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.


மத்திய அரசின் விளக்கம்:




இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அடிப்படையற்றவை. உள்நாட்டில் எரிவாயு கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. விநியோகத்தில் எந்தவிதத் தடையும் ஏற்படாது," என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கம்போல 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களே பொதுமக்களுக்குத் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


விலை உயர்வு மற்றும் தற்போதைய நிலை:


சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், எடையைக் குறைக்கும் வதந்தி மக்களிடையே கூடுதல் சுமையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருந்தது. தற்போதைய தெளிவான விளக்கத்தின் மூலம் அந்த அச்சம் நீக்கப்பட்டுள்ளது. அதே போல், வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் அரசு மறுத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தடையின்றி சிலிண்டர்களை விநியோகித்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மாற்றங்களைக் கண்காணித்து வரும் மத்திய அரசு, உள்நாட்டு விநியோகத்தைச் சீராக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.