நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!

Su.tha Arivalagan
Apr 15, 2026,05:04 PM IST

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


“பூஜ்ஜிய நிழல் தினம்” எனப்படும் அரிய இயற்கை நிகழ்வை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே அனுபவித்து, அதன் அறிவியல் பின்னணியை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.


நாம் திறந்த வெளியில் நின்றபோது சூரியன் நேராக மேலிருந்து கதிர்களை வீசுவதால், நமது நிழல் பக்கங்களில் தெரியாமல் பாதங்களின் கீழே மறைந்துவிடும். இந்த அபூர்வமான காட்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தங்கள் சுற்றுப்புற மக்களிடம் இந்த நிகழ்வின் அறிவியல் காரணங்களை தெளிவாக விளக்கினர். பள்ளி தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் வழங்கிய தகவலின்படி, “பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இருமுறை நிகழ்கிறது. சூரியன் நேராக மேல் நிலைக்கு (அட்சரேகைக்கு சமமாக) வரும் போது, அதன் கதிர்கள் பொருட்களின் மீது செங்குத்தாக விழுவதால் நிழல் காணாமல் போகிறது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபட்ட நாட்களில் நிகழும்” என்று மாணவர்கள் விளக்கினர்.




இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாணவிகள் ரித்திகா, நந்தனா, மற்றும் மாணவர்கள் அஜய், மோனிகா, விஜய், முகிலன், லேகாஸ்ரீ, ஸ்டெபி ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் உருளை வடிவ பொருட்களை வைத்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது, தங்களின் நிழல் பக்கங்களில் தெரியாமல் மறைந்ததை கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.


இந்த அனுபவத்தை அவர்கள் தங்களுடன் படிக்கும் நண்பர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அருகிலுள்ள பொதுமக்களுக்கும் நேரடியாக செய்து காட்டி, அறிவியல் உண்மைகளை எளிமையாக விளக்கினர்.




இந்நிகழ்வு மூலம், மாணவர்கள் விடுமுறை காலத்திலும் அறிவியல் மீது ஆர்வம் காட்டி, சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியமை பாராட்டத்தக்கதாகும்.


இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை வள்ளிமயில்   செய்து இருந்தார் .