வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

Su.tha Arivalagan
Mar 18, 2026,12:20 PM IST

பியாங்யாங்: வடகொரியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக 100 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் வடகொரியத் தேர்தல்களில், இம்முறை சுமார் 67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ‘எதிர்ப்பு’ வாக்குகள் பதிவாகியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை :


வடகொரியாவின் உயர்மட்ட மக்கள் பேரவைக்கான (Supreme People's Assembly) தேர்தலில், அதிபர் கிம் ஜாங் உன் 99.93 % வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எஞ்சியுள்ள 0.07% வாக்குகள் அவருக்கு எதிராகப் பதிவாகியுள்ளன. வடகொரியாவைப் பொறுத்தவரை தேர்தல் என்பது ஒரு சம்பிரதாயமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் கட்சியின் வேட்பாளர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிட அனுமதி கிடையாது. வாக்காளர்கள் வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை மட்டுமே முடிவு செய்ய முடியும்.


1957-க்குப் பிறகு நிகழ்ந்த மாற்றம் :




கடந்த 1957-ம் ஆண்டுக்குப் பிறகு, வடகொரிய தேர்தல் வரலாற்றில் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாக, அங்குள்ள மக்கள் அரசுக்கு பயந்து 100% ஆதரவை வெளிப்படுத்துவதே வழக்கமாக இருந்து வந்தது. இந்த முறை எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்ய ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட யாரும் இல்லாத சூழலில், மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இருந்த வேட்பாளரின் பெயரை பேனாவால் அடித்து (Cross out) தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மிகக் குறைந்த சதவீதமே (0.07%) என்றாலும், கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சிக்கு மத்தியிலும் மக்கள் துணிச்சலாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சர்வதேசப் பார்வை :


வடகொரியாவின் இந்த அறிவிப்பு, அந்நாடு ஜனநாயக முறைப்படி நடப்பது போன்ற ஒரு பிம்பத்தை உலகிற்கு காட்ட விரும்புவதையே உணர்த்துகிறது. "குறைந்தபட்ச எதிர்ப்பையாவது அனுமதிப்பதன் மூலம், தங்களது தேர்தல் முறை நியாயமானது" என்று வடகொரியா வாதிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எது எப்படியாயினும், 99.93% வாக்குகளுடன் கிம் ஜாங் உன் மீண்டும் தனது ஆட்சியைத் தொடர்ந்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் வடகொரியாவின் உட்புற அரசியலில் ஏதேனும் சிறு மாற்றங்களைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.