கமல்ஹாசன் தவறாக பேசவில்லை... மன்னிப்பு கேட்க கூடாது: நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்!
சென்னை: கமல்ஹாசன் வரலாற்று பூர்வமாக ஆதாரத்தை சொல்லியுள்ளார். அவர் தவறாக பேசவில்லை. கமல் மன்னிப்பு கேட்க கூடாது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக்லைஃப். இந்த படம் ஜூன் 5ம் தேதி திரையிடப்பட உள்ளது. சமீபத்தில் நடந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்ததாக பேசினார். இது பெரும் சர்ச்சையயும், எதிர்ப்பையும் கிளப்பியது. இதற்கு கர்நாடக ஐகோர்ட் மன்னிப்பு கேட்கும் படி உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கமல் வரலாற்று பூர்வமான ஆதாரத்தை சொல்லி உள்ளார். தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து பேசி பேசி அதிலிருந்து பிரிந்த பிற மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம். கன்னட மொழி தமிழிலிருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக சான்று கட்டு நிரூபித்து விட்டால் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள்.
கமலஹாசன் கூறியது வரலாறு. அதை வைத்துக்கொண்டு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன் என்பது சிறுபிள்ளை விளையாட்டு. கமல் மன்னிப்பு கேட்கக்கூடாது. நாங்கள் எல்லோரும் கமலுக்கு துணை நிற்போம் கமல் கன்னடர்களையும் மக்களையும் அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழில் இருந்து வந்தது தான் கன்னடம். தமிழின் குழந்தை தான் கன்னடம் என்று சொல்கிறார். கேஜிஎப் 1, கே ஜி எஃப் 2, காந்தாரா ஆகிய படங்களுக்கு நாங்கள் ஏதாவது இடையூறு செய்தோமா?
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ? தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும். வரலாற்று படித்தவர் கமல். சித்தராமையா தான் வரலாற்றை படிக்க வேண்டும்.திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும். கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. வாய்க்கு வந்ததையும் அவர் கூறவில்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.