நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

Su.tha Arivalagan
Mar 23, 2026,05:10 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்ற அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். "இலவசங்கள் கொடுப்பது லஞ்சத்திற்கு சமமானது" என்று கூறிய அவர், தான் ஏன் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்கவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.


திருத்தணியில் சாமி தரிசனம் :


திருத்தணி முருகன் கோவிலுக்கு கையில் வேல் ஏந்தி, தலையில் பச்சை துண்டு கட்டிக் கொண்டு கால் நடையாக மலையேறிச் சென்று இன்று சாமி தரிசனம் செய்தார் சீமான். திருத்தணியில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழ்நாடு முழுவதும் அவர் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


எல்லா கட்சிக்கும் நான் எதிர்கட்சி :




திருத்தணியில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தற்போதைய அரசியல் சூழல் குறித்துத் தனது பாணியில் ஆவேசமாகப் பேசினார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் ஒருவன் தான் உண்மையான எதிர்கட்சி. அவர்கள் ஒருவருக்கொருவர் திரைமறைவில் உடன்பாடு வைத்துக் கொண்டாலும், மக்களின் நலனுக்காக நாம் தமிழர் கட்சி தனித்தே நின்று போரிடுகிறது" என்றார்.


சூலாயுதமும் வேலாயுதமும் :


எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் வியூகங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "இங்கே இருக்கும் மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் கையில் 'சூலாயுதம்' ஏந்தியிருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நான் உண்மையான மாற்றத்திற்காகப் போராடும் 'வேலாயுதமாக' உங்கள் முன்னால் நிற்கிறேன். தீமைகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்ட இந்த வேல் பாயும்" என்று முழங்கினார்.


இலவசங்கள் என்பது லஞ்சம் :


தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் குறித்து சீமான் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களைத் தருவதாகக் கூறுவது மறைமுகமாக அவர்களுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம். மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே பிச்சையாகக் கொடுப்பதை ஏற்க முடியாது. "நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை அறிவிக்காது; மாறாக தரமான கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பை உரிமையாக வழங்கும்" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு இடமிருக்காது என்றும், அதனால் தான் அத்தகைய அறிவிப்புகளை வெளியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.