சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.. அதிலும் அமாவாசையன்று குளிப்பது மிக சிறப்பு!

Su.tha Arivalagan
May 16, 2026,10:21 AM IST

நம்முடைய முன்னோர்கள் பல பழக்கவழக்கங்களை வெறும் மரபாக மட்டும் வைத்துச் செல்லவில்லை; அதற்குப் பின்னால் உடல்நலம், மனநலம், ஆன்மீகம் ஆகிய மூன்றும் இணைந்த அர்த்தங்கள் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு அழகான வழக்கமே சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.


பொதுவாக எண்ணெய் குளியல் என்பது உடலுக்கு சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும் ஒரு இயற்கை மருத்துவம் என்று கூறப்படுகிறது. ஆனால் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு ஒரு தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கையும் உள்ளது. குறிப்பாக சனி பகவானுக்குரிய நாளான சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், மனஅழுத்தம் குறையும், வாழ்க்கையில் இருந்த தடைகள் மெதுவாக விலகத் தொடங்கும் என்று பெரியவர்கள் நம்பினர்.


சனி பகவான் என்பது தண்டிப்பவர் மட்டுமல்ல; நியாயத்தை காப்பவர் என்றும் கூறப்படுகிறார். வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மை மேலும் வலிமையாக்கும் ஒரு பயிற்சியாகவே பார்க்கப்படுகின்றன. அதனால் சனிக்கிழமை எண்ணெய் குளியல் என்பது உடலை மட்டும் சுத்தப்படுத்துவது அல்ல; மனதையும் சுமைகளிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆன்மீக அனுபவமாக பலர் கருதுகின்றனர்.




சில நேரங்களில் தெரியாமலே நாம் செய்யும் நல்ல செயல்களுக்கும் ஒரு நல்ல பலன் இருக்கும். “இன்று தெரியாமலோ தெரிந்தோ எண்ணெய் குளியல் எடுத்திருந்தால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தொடங்கப் போகிறது” என்று பெரியவர்கள் சொல்வது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல; அது ஒரு நேர்மறை நம்பிக்கை. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு புதிய உற்சாகத்தை தருகிறது.


மேலும், சனி ஜெயந்தி போன்ற நாளில் நல்லெண்ணெய் குளியல் எடுத்தல் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நல்லெண்ணெய் சனி பகவானுக்கு உரியது. அந்த நாளில் சனி பகவானை நினைத்து எளிய மனதுடன் பிரார்த்தனை செய்தால், மன அமைதி கிடைக்கும் என்றும், கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்றும் நம்பப்படுகிறது.


அதேபோல இன்று அமாவாசை. சனிக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளதால் இன்று தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.


சனி பாதிப்பு ஏற்பட்டதால தான் நளன் மகாராஜா நாடு, பதவி, ராஜ்ஜியம், குடும்பம் எல்லாத்தையும் இழந்து, இருந்தவர். ரொம்ப சாதாரண நிலைக்கு வந்தார். பிறகு சனி பாதிப்பு போனதும் அவருக்கு எல்லாமே திரும்பி கிடைச்சதுன்னு சொல்லுவாங்க. அவர் நாடு எல்லாத்தையும் இழந்து, வெளி உலகத்திற்கு தன்னை யாருன்னு தெரியாம ஒரு அரண்மனையில சமையல் வேலை செஞ்சு வாழ்ந்துட்டு இருந்தார். அத தான் நாம இப்பவும் நளபாகம்னு சொல்லுறோம். சமையல்ல நளனை அடிச்சுக்க ஆளே கிடையாது. தன்னை நம்பி வந்த மனைவி தமயந்தியை நடுகாட்டுல விட்டுட்டு போனாரு. ஆனால் சனி விலகினதும் மறுபடி  எல்லாம் அவருக்கு கிடைச்சது.


இன்றைய வேகமான வாழ்க்கையில் பழைய மரபுகளை பலர் மறந்து விட்டாலும், சில பழக்கங்கள் நமக்கு உடல் நலத்தையும் மன அமைதியையும் தருகின்றன. சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அப்படிப்பட்ட ஒரு அழகான பாரம்பரியம். நம்பிக்கையோடு செய்யப்படும் ஒவ்வொரு நல்ல பழக்கமும் வாழ்க்கையை மெதுவாக நல்ல திசைக்கு மாற்றும் சக்தி கொண்டதே.