ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!
- ஸ்வர்ணலட்சுமி
ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாட்டமாக இந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவோண நட்சத்திரம் வருகின்ற நாளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருவோண நட்சத்திரம் செப்டம்பர் 4 ஆம்தேதி வியாழக்கிழமை இரவு 11 :44 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்தியாவில் மலையாள மக்கள் அனைவராலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை ஒன்றாகும். சிம்ம மாதம் எனப்படும் ஆவணி மாதத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் கேரள பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஒற்றுமையின் அடையாளமாகவும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும்.
ஓணம் பண்டிகை மலையாள மக்களின் அறுவடை திருவிழாவாக மிகப்பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. அசுர மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக ஓன பண்டிகை கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பண்டிகையில் 64 வகையான ஓணம் சத்தியா விருந்து,படகு போட்டிகள்,வண்ண வண்ண அழகான மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். அஸ்தம் நட்சத்திரம் நாளில் தொடங்கி பத்தாம் நாளான திருவோணம் நட்சத்திரம் மிக முக்கியமான நாளாக கருதி ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புராணக்கதை : கேரளாவை ஆண்ட அசுர அரசனான மகாபலி மன்னன் பெரிய யாகம் ஒன்றுநடத்தினான்.அந்த யாகம் வெற்றிகரமாக நடத்தினால் இந்திரலோகமே அவனது வசமாகும்.இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களை காப்பதற்காக மூன்று அடி உயரமான வாமன வடிவம் எடுத்து மகாவிஷ்ணு யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். மூன்று அடி நிலம் வேண்டும் என்ற வரம் கேட்ட வாமனருக்கு மகாபலி மன்னன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும் விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆக திரு விக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு -முதல் அடி வானத்தை,இரண்டாவது அடி பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலி தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரம் அளித்தார். மகாவிஷ்ணுவின் வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது மக்களை காண மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோண நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மகாபலி வரவேற்பதற்காக வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு அழகாக அலங்காரம் செய்து, பலவிதமான உணவுகள் சமைத்து பரிமாறி, மகாவிஷ்ணு வாமனர் அவதாரம் எடுத்த நாள் முதல் மகாபலி மீண்டும் பூமிக்கு திரும்பி வருவது வரையிலான காலத்தை போற்றும் விதமாக பத்து நாட்கள் ஓணம் பண்டிகை பெரும் விழாவாககொண்டாடப்படுகிறது.
புலி களி அதாவது குழு நடனம்,ஓணம் களி,கயிறு இழுத்தல்,தும்பித்துள்ளல் (பெண்கள் நடனம் ), ஓணத்தப்பம் (வழிபாடு) பூக்காலம் (மலர்க்கோலம் ) ஓணத்துள்ளல் ( தற்காப்பு கலைகள் ) ஓண வில்லு (இசை) ,ஓணபொட்டான் ( ஆடை அலங்காரம்) படகு போட்டி அதேசமயம் நாட்டுப்புற பாரம்பரிய நடனங்கள் ஓணம் சத்தியா (பிரம்மாண்ட விருந்து) அனைத்தும் ஓணம் பண்டிகை அன்று நடைபெறும்.
கேரளாவின் பாரம்பரியத்தை போற்றிக் கொண்டாடும் உன்னதமான பண்டிகையான ஓணம் பண்டிகை மகிழ்ச்சி,செல்வம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.