Operation Sindoor.. வருஷத்துக்கு 1000 தீவிரவாதிகளை உருவாக்கும் முரித்கே லஷ்கர் முகாம்!

Su.tha Arivalagan
May 07, 2025,10:22 AM IST

சண்டிகர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் உள்ள ஒரு முக்கிய நகரம்தான் முரித்கே. இந்த நகரில் உள்ள மிக முக்கியமான தீவிரவாத முகாமைத்தான் இந்தியப் படைகள் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலில் தாக்கி அழித்துள்ளன.


பாகிஸ்தானின் முக்கியமான நகரங்களில் ஒன்று முரித்கே. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷேக்குபுரா மாவட்டத்தின் தலைநகர்தான் முரித்கே. லாகூருக்கு மிக அருகில் உள்ள நகரம் இது.  இந்த நகரிலிருந்து பல முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளன.


இப்படி பல பெருமைகள் இருந்தாலும் கூட, மிக கருமையான ஒரு இருண்ட முகத்தையும் இந்த நகர் கொண்டுள்ளது. அந்த கருப்பு முகத்தைக் கொடுத்தவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள். முரித்கே நகரில் மிகப் பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை லஷ்கர் அமைப்பு நடத்தி வருகிறது. மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமையகமும் இதுதான்.




மத போதனைகளுடன் மூளைச் சலவை செய்வது, ஆயுதப் பயிற்சி தருவது என்று சகல விதமான தீவிரவாத பயிற்சிகளையும் இங்குள்ள முகாமில் லஷ்கர் இ தொய்பா கொடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மிகப் பெரிய தீவிரவாத முகாமில் இது முக்கியமானது. இந்த முகாமிலிருந்து வருடந்தோறும் 1000 தீவிரவாதிகளாவது உருவாகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறது. 


இவர்களை பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறு வைத்து நீண்ட காலமாக நாச வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.


ஹபீஸ் சயீத்தான் இந்த அமைப்பின் தலைவன் ஆவான். இந்த அமைப்பின் துணை அமைப்புதான் (ஜமாத் உத் தவா) பஹல்காம் தாக்குதலை நடத்தியுள்ளது. 26 பேரின் உயிரை வாங்கிய இந்தத் தாக்குதலுக்குத்தான் இப்போது இந்தியப் படைகள் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளன.


லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா ஆகிய இரு அமைப்புகளின் தலைமையக கட்டடமானது கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பளவில் இங்கு அமைந்துள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தீவிரவாத தலைமையமாக இது செயல்பட்டு வந்தது. லாகூர் நகரமானது இந்த இடத்திலிருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.