திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

Su.tha Arivalagan
Sep 30, 2025,02:10 PM IST

சென்னை: திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பம் பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் உச்சம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை பாலியல் பலாத்கார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவு:


திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.




பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.  பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?


இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.