ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்

Su.tha Arivalagan
Mar 06, 2026,05:58 PM IST

சென்னை : திமுக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் பெறுவதற்கான கடைசி நாளான இன்று, ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் அல்லது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிவுதற்கு அவரது சார்பில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இன்று விருப்பமனு பெற்றார்.


ஓபிஎஸ்.,க்காக விருப்பமனு :




முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், சமீபத்தில் திமுக.,வில் இணைந்தார். இதனால் தனது போடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் மீண்டும் போடி அல்லது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவரது மகன் ரவீந்திரநாத், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து விருப்பமனுவை பெற்றுக் கொண்டார். போடிநாயக்கனூர் தொகுதியில் ஏற்கனவே ஓபிஎஸ் தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக இருந்தவர். அதற்கு முன்பு தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் இந்த முறை திமுக சார்பில் ஓபிஎஸ்.,க்கு போடிநாயக்கனூர் தொகுதியை ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.


உதயசூரியன் சின்னத்தில் ஓபிஎஸ் :


2001ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை நடைபெற்ற 5 சட்டசபை தேர்தல்களில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓபிஎஸ். தேனி மாவட்டத்தில் அதிமுக.,வின் முகமாக இதுவரை பார்க்கப்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது திமுக.,வில் இணைந்துள்ளார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட முடியும். இதற்கு முன்பு 2024ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியையே சந்தித்தார். 


திமுக.,விற்கு பலன் தருமா?


அதிமுக.,வில் இருந்து எத்தனையோ பேர் திமுக.,வில் சென்று இதற்கு முன் இணைந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அதிமுக.,வில் எம்எல்ஏ, அமைச்சர் என்ற பதவிகளை மட்டுமே வகித்துள்ளார்கள். ஆனால் அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நிர்வகித்த ஓபிஎஸ் திமுக.,வில் சென்று இணைந்துள்ளது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய புள்ளியை திமுக தன்வசப்படுத்தி உள்ளது அந்த கட்சிக்கு மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் களத்தில் திமுக.,விற்கு இது பலம் சேர்க்குமா என்றால் அது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.


திமுக என்ன பாதிப்பு வரும்?


எப்படியும் ஓபிஎஸ் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவார். இப்போது அவர் விருப்பமனு பெற்றுள்ள போடிநாயக்கனூர் தொகுதியே அவருக்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. போடி தொகுதியை பொருத்தவரை கிராமங்கள் அதிகம் நிறைந்தது. இங்குள்ள மக்கள் இதுவரை ஓபிஎஸ்.,ஐ அதிமுக.,க்காரர் என்றே பார்த்து பழகி விட்டார்கள். அவருக்காக இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு, வெற்றி பெற வைத்தார்கள். தற்போது திமுக.,வின் உதயசூரியன் சின்னத்திற்காக ஓபிஎஸ் ஓட்டு கேட்பது எடுப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ்.,க்கு ஓட்டு போட நினைப்பவர்கள் இதுவரை பழக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினால் திமுக.,விற்கு வர வேண்டிய ஓட்டுக்கள் அப்படியே அதிமுக.,விற்கு செல்லும்.