எடப்பாடி பழனிச்சாமியுடன் இணையும் பேச்சிற்கே இடமில்லை...ஓபிஎஸ் திட்டவட்டம்

Su.tha Arivalagan
Dec 24, 2025,06:44 PM IST

சென்னை : தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார், யாருடைய கூட்டணியில் இணைய போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.


சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இனி எக்காலத்திலும் இணையப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசியலில் எதிரியை விட துரோகி மிகவும் ஆபத்தானவர். எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவே வெட்கப்படுகிறேன் என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக சந்தித்த 11 தொடர் தோல்விகளைச் சுட்டிக்காட்டிய அவர், கட்சி தற்போது பாதாளத்திற்குச் சென்று விட்டதாகக் குற்றம் சாட்டினார்.




தனது அமைப்பின் பெயரில் இருந்த 'குழு' என்ற சொல்லை நீக்கி, 'கழகம்' என மாற்றியதன் மூலம், ஓ.பி.எஸ் தனது அணியை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாற்றத் தயாராகி வருகிறார். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், ஜனவரி மாதத்தில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார். மறுபுறம், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று (டிசம்பர் 23) எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.


2026 சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே பாஜக எதிர்கொள்ளும் என்று பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்."அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகையுமில்லை" என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என விஜய் தலைமையிலான தவெக-விற்கும் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.


ஆனால் இன்று ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை தெளிவாக, வெளிப்படையாக தெரிவித்துள்ளதால் அதிமுக ஒருங்கிணைப்பு என்ற எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் இணைய மாட்டேன் என தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இணைய மாட்டேன் என கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் அதிமுக.,வுடன் மீண்டும் சேராமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியை இணைத்து அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.