அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)

Su.tha Arivalagan
Jun 05, 2026,10:11 AM IST

- பூரணவள்ளி சேகர்


கமலா தன் மகள் தேவி மற்றும் மகன் கண்ணன் இருவரையும் மிகவும் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தாள். தன் கணவனின் இறப்பிற்குப் பின் தனி ஆளாகத் தன் இரு பிள்ளைகளுக்கும் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தாள்.


மகள் தேவி திருச்சியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தாள். மகன் கண்ணன் தன் மனைவி கவிதா மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வந்தான். கமலா மட்டும் கிராமத்தில் தனியாக இருந்தாள்.


சிறிய குழந்தைகள் எல்லாரும் அப்பத்தா என்று ஆசையுடன் கமலாவை அழைப்பார்கள். தன் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்தி களை கிராமத் திருவிழாவிற்கு வருமாறு அழைப்பாள். பேரப்பிள்ளைகளுக்கும் அப்பத்தாவின் மீது பிரியம் அதிகம்.




தங்களின் வேலையைக் காரணம் காட்டி வர மறுத்து வந்தனர் பிள்ளைகள் இருவரும். தற்போது கிராமத்தில் திருவிழா நடக்கிறது. பிள்ளைகள் அனைவரும் பேரன் பேத்திகளோடு வந்திருக்கின்றனர். கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.


அனைவரும் கிராமத்திற்கு வந்திருப்பதையும் கூடி இருப்பதையும்  நடு வீட்டில் வைத்திருந்த பெரிய புகைப்படத்தில் இருந்த கமலா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். 


ஆம். அனைவரும் ஒன்றாக வந்திருப்பது கமலா அப்பத்தாவின் துக்க நிகழ்வுக்காக என்று உங்களுக்குத் தெரியுமா?


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)