SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

Meenakshi
Nov 11, 2025,05:06 PM IST

சென்னை: SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. தொடர்ந்து செயலாற்றுவோம், நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 2026ம் ஆண்டு  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் ஆணையம் கைவிட கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!


ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம். 


மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட WarRoom, Helpline!


களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!


தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று தெரிவித்துள்ளார்.