பழனியை சேர்ந்த மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை.. வாழ்த்து மழையில் நனையும் ஓவியாஞ்சலி..!
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 95.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பள்ளி மாணவர்கள் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, முதன்மை பாடமான கணினி அறிவியலில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியலில் 3,181 மாணவர்களும், கணிதத்தில் 3,022 மாணவர்களும், தமிழில் 135 மாணவர்களும், வணிகவியலில் 1,624 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
அதேபோல் மொழி பாடங்களான தமிழில் 99.20% (ஆண்கள் 98.72 சதவிகிதம், பெண்கள் 99.62 சதவிகிதம்), ஆங்கிலத்தில் 98.50(ஆண்கள் 97.90 சதவிகிதம், பெண்கள் 99.04 சதவீதம்) சதவிகிதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.600க்கு 599 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் ஒரே ஒரு மதிப்பெண்கள் குறைந்து 99 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.