உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!

Su.tha Arivalagan
Jul 14, 2026,01:59 PM IST

- கொடைக்கானல் ப.வினு


நீ

என் தோழி தான் என்று

நான் என்னையே

நம்ப வைத்துக்கொண்ட நாட்கள்

அதிகம்.


நீ சிரிக்கும் போது

அது

நட்பின் சிரிப்பு என்று

நான் பெயர் வைத்தேன்

என் மனம் மட்டும்

அதை

காதலாகத்தான்

அழைத்தது.




உன்னிடம்

எதையும்

எதிர்பார்க்காதவனாக

நடிக்க கற்றுக்கொண்டேன்

ஆனால்

உன்னைப் பார்க்காத நாள்களில்

நான்

என்னை இழந்தேன்.


தோழி என்ற வார்த்தை

பாதுகாப்பானது

அதற்குள்

என் காதலை

ஒளித்து வைத்தேன்

வெளியில் சொன்னால்

உன்னை இழந்துவிடுவேனோ

என்ற பயத்தில்.


இது

உன்னைப் பெற முடியாத

காதல் இல்லை

உன்னை இழக்கக் கூடாத

காதல்.


அதனால் தான்

இன்றும்

நான்

உன் அருகில்

நண்பனாக நிற்கிறேன்

என் உள்ளே மட்டும்

யாருக்கும் தெரியாமல்

ஒரு காதலன்

அமர்ந்திருக்கிறான்


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)