நேர்மைக்கு மறு பெயர் பத்மா.. சொக்கத் தங்கத்தின் மறு உருவம்!

Su.tha Arivalagan
Feb 01, 2026,01:28 PM IST

ஆ.வ.உமாதேவி


சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த, பத்மா என்பவர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி சென்னை தி.நகர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தரையில் கிடந்த ஒரு பையை அவர் கண்டெடுத்தார். அதில் 45 சவரன் தங்க நகைகள் இருந்ததை அறிந்து, உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


அது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நகை, நங்கநல்லூரை சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் உரிமையாளரிடம், நகை ஒப்படைக்கப்பட்டது. பத்மாவின் இந்த நேர்மையான செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கி பாராட்டினார். 


இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய கோட்டம் தமிழக அஞ்சல் துறை சார்பில் பத்மாவின் நேர்மையை போற்றும் விதமாக, அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளனர்  மேலும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சார்பில் அவரது பெயரில் ப்ரீமியம் சேமிப்பு கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விஷ்ணுராஜ், பத்மாவிடம் வழங்கியுள்ளார்.




எத்தனை பெரிய விஷயம் இது.. எத்தனை பேருக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். பத்மாவின் நேர்மையும் சமூகப் பொறுப்புணர்வும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நேர்மை என்றால் கிலோ என்ன விலை? எனக் கேட்கும் இக்காலத்தில் இப்படி ஒரு நேர்மையான செயல் என்னை பாதித்ததன் விளைவே, இக்கட்டுரை. 


பத்மாவை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பொருளை இழந்தவருக்கு பத்மாவின் இச்செயல் மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கும். அவர் நிலையில், என்னை வைத்து பார்க்கும் போது, என்னால் அந்த உணர்வை முழுமையாக உணர முடிகிறது. 


நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் இவ்வேளையில், பத்மாவின் இச்செயல், அவரை என் மனதில் மிக உயரத்தில் வைத்து விட்டது. இளம் தலைமுறையினருக்கு  இவரது இச்செயலை சொல்லி, அவர்களின் மனதில் நல் விதையை விதைக்கலாம். அவ்வாறு விதைத்தோமானால்  எதிர்காலத்தில் இன்னும் பல பத்மாக்களை நாம் பெறும்  உன்னத நிலை வரும். நல்ல குணங்களை இப்படிப்பட்ட உண்மை சம்பவங்களுடன் குழந்தைகளிடம் சொல்லும்போது, அது பசுமரத்தாணி போல் மனதில் பதியும் என்பதில் எள்ளளவு ஐயம் இல்லை. 


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)