பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
பஹல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஜிப்லைன் மூலம் பயணித்த ஒருவர் கீழே தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றி அறியாமல் மேலே பயணித்தபடி காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் பாஹல்காமில் கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு சுற்றுலா பயணி ஜிப்லைன் சவாரி செய்தபோது இந்த தாக்குதலை பதிவு செய்துள்ளார். ஆனால் கீழே நடக்கும் தாக்குதல் குறித்து அவருக்குத் தெரியவில்லை.
அகமதாபாத்தைச் சேர்ந்த ரிஷி பட் என்ற சுற்றுலா பயணி, நீல நிற கோடு போட்ட சட்டை அணிந்து, கூலிங் கிளாஸ் மற்றும் ஹெல்மெட் அணிந்து ஜிப்லைனில் சவாரி செய்தார். அப்போது செல்ஃபி ஸ்டிக் மூலம் வீடியோ எடுத்தார். பின்னணியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. பயங்கரவாத தாக்குதல் நடப்பது தெரியாமல் அவர் சிரித்தபடி சவாரி செய்தார். மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தில் சிதறி ஓடினர். ஜிப்லைன் சவாரி முடிந்து அவர் கீழே இறங்கியபோது, இன்னொரு சுற்றுலா பயணி சுடப்பட்டு கீழே விழுந்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பட் அளித்துள்ள பேட்டியின்போது, ஜிப்லைனிலிருந்து வந்ததும், துப்பாக்கிச் சூடு நடந்ததை உணர்ந்ததும், பாதுகாப்பு பெல்ட்டை கழற்றிவிட்டு ஓட ஆரம்பித்தேன். என் மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு ஓடினேன். மக்கள் ஒரு குழியில் மறைந்திருந்தார்கள். நாங்களும் அங்கே ஒளிந்து கொண்டோம். 8-10 நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நின்றதும், நாங்கள் மெயின் கேட்டை நோக்கி ஓடினோம். மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. நான்கு ஐந்து பேர் சுடப்பட்டனர்.
எங்கள் கண் முன்னே 15-16 சுற்றுலா பயணிகள் சுடப்பட்டனர். நாங்கள் கேட்டை அடைந்தபோது, உள்ளூர் மக்கள் ஏற்கனவே சென்றுவிட்டனர். ஒரு குதிரை வண்டி ஓட்டுனர் எங்களுக்கு உதவினார். ராணுவம் கீழ் பகுதிகளில் இருந்தது. முக்கிய இடத்தில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றார் அவர்.
ஏப்ரல் 22 அன்று பாஹல்காமில் உள்ள பைசாரனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் (24 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாளி) மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். இந்த இடம் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இந்திய கடற்படை அதிகாரி மற்றும் உளவுத்துறை பணியாளரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் இதற்குப் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை குறைத்தது. மேலும் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை ரத்து செய்வது உட்பட பல நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை மூடுவது உட்பட பல நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நீரை திசை திருப்பும் எந்த நடவடிக்கையும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இஸ்லாமாபாத் கூறியது.