நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அ. சீ. லாவண்யா
இஸ்லாமாபாத்: ஆப்ரேஷன் 'சிந்தூர்' நடவடிக்கையின் போது நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான், இப்போது முதன்முறையாக நூர் கான் விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது உண்மை என ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தாக்குதல் ஆபரேஷன் 'சிந்தூர்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், இந்திய ஏவுகணைகள் மிகுந்த துல்லியத்துடன் இலக்கைத் தாக்கியதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்தக் கருத்து, இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு நிலைப்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
நூர் கான் விமானப்படைத் தளம் பாகிஸ்தானின் முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தளத்தின் மீது தாக்குதல் நடந்தது பாதுகாப்பு அமைப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்புதல் வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச சமூகமும் தெற்காசிய பாதுகாப்பு நிலைமைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, இந்திய தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான விரிவான விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. எனினும், தாக்குதல் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பே ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
(அ. சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)