பாகிஸ்தானை அதிர வைத்த உமர்ஷா மரணம்.. வெறும் 15 வயதுதான்.. மாரடைப்பால் நடந்த பரிதாபம்!

Su.tha Arivalagan
Sep 16, 2025,03:59 PM IST

கராச்சி: பாகிஸ்தானில் ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமான உமர் ஷா என்ற 15 வயது  சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


புன்னகைக்கும் முகம், அனைவரையும் கவரும் தோற்றம் எனப் புகழ்பெற்ற உமர், திங்கட்கிழமை அதிகாலை தனது சொந்த ஊரான டேரா இஸ்மாயில் கானில் உயிரிழந்தார். குடும்பத்தினர் மற்றும் மருத்துவ அறிக்கைகளின்படி, உமருக்கு வாந்தி ஏற்பட்டதாகவும், அதனால் நுரையீரலில் திரவம் சென்று, மாரடைப்பைத் தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரது வீட்டில் ஒரு விஷப்பாம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மரணம், மாரடைப்பால் வந்ததா அல்லது பாம்பினால் வந்ததா என்ற குழப்பமும் நிலவுகிறது.




உமரின் மூத்த சகோதரரான அகமது ஷா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், எங்கள் குடும்பத்தின் சிறிய நட்சத்திரம் உமர் ஷா, அல்லாஹ்விடம் திரும்பிவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் உங்கள் பிரார்த்தனைகளில் நினைவில் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.


இது அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இரண்டாவது சோகம். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில்தான், இவர்களின் இளைய சகோதரியான ஆயிஷாவையும் இழந்திருந்தனர்.


உமர், தனது மூத்த சகோதரருடன் இணைந்து சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வந்தவர். ஜீட்டோ பாகிஸ்தான் மற்றும் ஷான்-இ-ரமழான்  போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் இருவரும் தோன்றினர். பல்வேறு உடைகளில், பீச்சே டூ தேக்கோ (peeche tou dekho) என்ற நகைச்சுவைப் பதிவுகளால் அவர்கள் ரசிகர்களின் விருப்பமானவர்களாக மாறினர்.