இந்தியாவின் அதிரடியால் ஆட்டம் காணும் பாகிஸ்தான்.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!

Su.tha Arivalagan
May 09, 2025,01:26 PM IST

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில்,  இந்திய சந்தைகள் சற்று தடுமாறினாலும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்ததால், இரு நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. இது பாகிஸ்தானில் மோசமாக உள்ளது. இந்தியாவில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.


பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. KSE-100 குறியீடு ஒரே நாளில் 6,400 புள்ளிகள் வரை சரிந்தது. இந்தியாவின் drone தாக்குதல்களால் கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் முதலீட்டாளர்கள் பீதியடைந்தனர். இதனால் ஒரே நாளில் சுமார் 820 பில்லியன் ரூபாய் சந்தை மதிப்பு குறைந்தது. கடந்த மூன்று நாட்களில் PSX சந்தை மதிப்பு சுமார் 1.3 டிரில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளது. 




ஆனால், இந்திய பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிலையாக உள்ளன. BSE சென்செக்ஸ் 680 புள்ளிகள் குறைந்து 79,654.73 ஆகவும், NSE நிஃப்டி 141.5 புள்ளிகள் குறைந்து 24,132.30 ஆகவும் இருந்தது. இந்த வேறுபாடு இரு நாடுகளின் பொருளாதார இடைவெளியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் சந்தைகள் வலுவான ஆதரவுடன் நிலையாக உள்ளன.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பொருளாதார வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் IMF அமைப்பின் உதவிக்காக காத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்துள்ளதால், பங்குச் சந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படலாம். ஆனால், வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானின் நிதி அமைப்பு இந்தியாவை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.