பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும்.. ஒன்றும் ஆகாது.. அஸ்ஸாம் முதல்வர் பதிலடி!
டெல்லி: பிரம்மாபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்தினால் என்னாகும் தெரியுமா என்று இந்தியாவை மிரட்டும் போக்கில் பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு கற்பனையான மிரட்டல். பிரம்மபுத்திரா நதியில் ஓடும் நீர், இந்தியாவிலிருந்துதான் பெருமளவில் போகிறது. சீனாவின் பங்கு இதில் மிக மிக குறைவு. எனவே சீனா பிரம்மபுத்திரா நீரை தடுக்கும் என்று கூறுவது, ஆதாரமற்ற முயற்சி. இந்தியாவின் புவியியல், பருவமழை ஆகியவற்றால்தான் பிரம்மபுத்திரா நதி வலுப்பெறுகிறது.
ஒரு வேளை பிரம்மபுத்திரா நதியின் நீரை சீனா தடுக்குமானால், அது அஸ்ஸாமில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைத்து நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்றார் பிஸ்வாஸ்.
பிரம்மபுத்திரா நதியின் நீரில் 65 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. பருவமழை மற்றும் வடகிழக்கில் உள்ள துணை நதிகள் மூலம் கிடைக்கிறது. இந்திய-சீன எல்லைக்கு வரும்போது துடிங் ஆற்றில் (அதாவது பிரம்மபுத்திரா நதியின் சீனப் பெயர்), நீரின் ஓட்டம் வினாடிக்கு 2,000 முதல் 3,000 கன மீட்டர் வரை இருக்கும் என்றும், இது பருவமழை காலத்தில் அசாமில் 15,000-20,000 கன மீட்டர் வரை ஆக அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் பிஸ்வாஸ் சுட்டிக்காட்டினார்.
நாடுகடந்த நதியான பிரம்மபுத்திரா, தென்மேற்கு சீனாவில் உள்ள கைலாஷ் மலைக்கு அருகில் உள்ள மானசரோவர் பகுதியில் இருந்து உருவாகிறது. இது திபெத் வழியாக பாய்ந்து, அருணாச்சல பிரதேசத்தின் வழியாக இந்தியாவில் நுழைந்து, அஸ்ஸாம் வழியாக பாய்ந்து, வங்காளதேசத்திற்குள் சென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.