இந்தியாவுடனான மோதலை.. மதப் பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தான்.. நோஸ்கட் கொடுத்த மலேசியா
டெல்லி: நாம் இருவரும் இஸ்லாமிய நாடுகள். இந்தியாவின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று மலேசியாவிடம் கூறி பிரச்சினையை திசை திருப்பப் பார்த்துள்ளது பாகிஸ்தான். ஆனால் அதை நிராகரித்து விட்டதாம் மலேசியா.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ஆடிப் போனது. பதில் தாக்குதலை நடத்த முயன்றும் கூட அதை இந்தியப் படைகள் வெற்றிகரமாக தகர்த்து விட்டன.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விளக்க எம்.பிக்கள் குழுக்கள் அனுப்பப்பட்டன. அந்த வகையில்,
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜா தலைமையிலான இந்தியக் குழு மலேசியாவுக்கு சென்றிருந்தபோது, பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக மதரீதியான அணுகுமுறையை மேற்கொண்டது. மலேசிய அரசு அதிகாரிகளிடம், நாம் இருவரும் இஸ்லாமிய நாடுகள், இந்தியக் குழுவின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தூதரகம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய பாகிஸ்தான் முயன்றது. ஆனால் மலேசிய அரசு பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினை நிலுவையில் இருப்பதாகக் கூறி, இந்தியக் குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய பாகிஸ்தான் முயன்றது. இருப்பினும், மலேசிய அரசாங்கம் பாகிஸ்தானின் இந்த முயற்சியை நிராகரித்தது. இந்தியக் குழுவின் பத்து நிகழ்ச்சிகளுக்கும் மேல் மலேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றன.
இஸ்லாம் என்ற பெயரைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை அணி திரட்ட பாகிஸ்தான் முயற்சிப்பதையே இது காட்டுகிறது. ஆனால் பாகிஸ்தான் முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்து வருகின்றன
மலேசியாவைப் பொறுத்தவரை அது இஸ்லாமிய நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவும் மலேசியாவும் நீண்டகாலமாக நல்லுறவைப் பேணி வருகின்றன. இந்த உறவு பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இதனால்தான், பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.