எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

Manjula Devi
Apr 25, 2025,04:57 PM IST

டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேறவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியுள்ளது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.


பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசரமாக சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக  ஆலோசனைகளை நடத்தினார். இதன் அடிப்படையில்  அதிரடி முடிவுகளை இந்தியா அறிவித்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அட்டாரி வாகா எல்லை பகுதி மூடப்படும். இந்தியாவிற்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்  இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு இனி விசாக்கள் வழங்கப்படாது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.




இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறினர். அதேபோல் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமும் முடக்கப்பட்டது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எழுமோ என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன.


இந்தியா எடுத்த அதே நடவடிக்கைகளை பாகிஸ்தான் தரப்பும் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்குப் போயிருந்த இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அந்த நாடு தடை விதித்துள்ளது.


இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்க ஏர் இந்திய நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்திய விமானங்கள் வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 01169329333,01169329999 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


மறுபக்கம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டில் இறங்கியுள்ளது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.