பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு

Meenakshi
Apr 08, 2025,03:05 PM IST

திண்டுக்கல்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏப்., 10,11 மற்றும் 12ம் தேதிகளில் கட்டண தரிசனம் ரத்து, இந்த 3 நாட்களும் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோவில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாகும். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இங்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் ரயில் மற்றும் ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.


அதுமட்டும் இன்றி பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், தை பூசம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தைப்பூச திருவிழா தற்போது முடிந்த நிலையில், பங்குனி உத்திர திருவிழா தொடங்கியுள்ளது. கடந்த 5ம் தேதி பழனியில் உள்ள திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த விழா நடைபெற்று வருகிறது.




இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வரும் 10,11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த 3 நாட்களும் கட்டணம் இல்லாத இலவச தரிசனம் செய்யலாம். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.