பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

Su.tha Arivalagan
Aug 25, 2026,12:41 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பரந்தூர் இரண்டாம் கட்ட விமான நிலையத் திட்டம், நிலக் கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.


பரந்தூர் நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள்: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு

சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்த நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேரவையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், விமான நிலையத்திற்குப் பதிலாக மாற்று தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.




மேலும் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது என்பது இதுவரை எந்தவொரு அரசாங்கமும் செய்யாத சாதனை. அதை நமது அரசு சாதித்துக் காட்டியுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. தொழில்துறை என்பது மிக முக்கியமான உணர்வுப்பூர்வமான (Sensitive) தலைப்பாகும். எனவே இதில் அரசியல் செய்யக் கூடாது. 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து, தமிழகத்தின் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உதவ வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


"கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிலக் கையகப்படுத்துதல் குறித்து கேள்வி எழுப்பினார். "பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஏற்கனவே அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை மக்களிடமிருந்து திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று" என்று அவர் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார்.


"திட்டத்தை கைவிடுவது பொருளாதாரத்திற்கு பின்னடைவு" - தங்கம் தென்னரசு

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்துப் பேசுகையில், "பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்ட பிறகே பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. எந்த இடத்தில் விமான நிலையம் அமைத்தாலும் அங்கேயும் விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்யும்; அப்போதும் பிரச்சனைகள் எழத்தான் செய்யும். சென்னை விமான நிலையத்தில் எவ்வாறு 2-வது ரன்வே அமைக்க முடியும்? எனவே, பரந்தூர் திட்டத்தை கைவிடுவது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்" என்று தனது கவலையைத் தெரிவித்தார்.


பரந்தூரில் நில மோசடி - விசாரணைக்கு ஆதவ் அர்ஜூனா கோரிக்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டமன்றத்தில் பேசுகையில் பரந்தூர் திட்டம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த நிலத்தைச் சுற்றி மிகப்பெரிய அளவில் சொத்துக்களை வாங்கி நில மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்காகத் தான் பரந்தூரில் விமான நிலையம் உருவாக்கப்பட்டது. பத்திரம் பதிவுத் துறை இது குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


மேலும் பேசிய அவர், "பரந்தூர் விமான நிலையமா? அல்லது விவசாயிகளின் கண்ணீரா? என்ற கேள்வி எழுந்தால், எங்கள் தலைவர் (முதல்வர் விஜய்) எப்போதும் விவசாயிகளின் கண்ணீர் பக்கம் தான் நிற்பார்" என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.