கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

Su.tha Arivalagan
May 26, 2026,12:52 PM IST

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாகக் காணப்படுகிறது. கத்தரி வெயில் காலம் முடிவடைய உள்ள நிலையில் பல இடங்களில் வெயிலின் கொடூரம் குறையவில்லை. இத்தகைய கடுமையான வெப்ப அலை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள், கடுமையான வெப்பத்தால் நீரிழப்பு, உடல் சோர்வு மற்றும் அம்மை போன்ற கோடைகால நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. 


மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் இந்த கடுமையான வெப்ப சூழலில் பணிபுரிய வேண்டியிருப்பதால், அவர்களின் உடல்நலமும் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல் :




இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதை குறைந்தது ஒரு வார காலத்திற்கு ஒத்திவைப்பது மட்டுமே மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சிறந்த வழியாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அரசு அறிவிப்பு என்ன?


தமிழக பள்ளி கல்வித்துறையின் தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த ஒத்திவைப்பு கோரிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பலத்த ஆதரவைப் பெற்று வருகிறது.


வெயிலின் தாக்கம் நீடித்து வருவதால், பள்ளி கல்வித்துறை இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி திறப்பு தேதியை மாற்றி அமைக்குமா அல்லது திட்டமிட்டபடி ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.