வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
Aug 17, 2026,01:26 PM IST
- பசுங்கிளி
வாய்க்கால் கரையோரம்
வயல் காட்டு மேட்டோரம்
வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
வரவேணும் மாமா நீ
வரவேற்க நா இருக்கேன்
பட்டணந்தான் நீ போய்
கட்டு கட்டா பணம் சேர்த்தாலும்
வயல் வெளியில் நீ இறங்கி
வரப்பு வெட்ட வேணும் மாமா
ஏர்பூட்டி உழ வேணும், என்னோடு கை கோர்த்து
நாத்து நல்லா நட வேணும்
நட்ட பயிர் வளர்ந்திடவே
தண்ணி தினம் பாய்ச்ச வேணும்
கடைக்கண்ணால் நான் பார்க்க
களைகளெல்லாம் நீ எடுக்க வேணும்
பக்குவமாய் பயிர் வளர
சிவசாமி துணை இருக்கும்
கதிர் அறுக்க வேண்டும் மாமா
விளஞ்ச நெல்ல அரிசியாக்கி
வெல்லமெல்லாம் தட்டி போட்டு
பக்குவமா பொங்கல் வச்சி
சிவசாமி கோயிலுக்கு
போலாமே வா மாமா