பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற கொள்கை கொண்ட தேசியத் தலைவரும், பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக திகழ்ந்தவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினமும், பிறந்த தினமும் அக்டோபர் 30ம் தேதி வருகிறது. இந்த நாளை குரு பூஜையாக கொண்டாடுவது வழக்கம். மொத்தம் 3 நாட்களாக இந்த விழா நடத்தப்படுவது வழக்கம். கடைசி நாளான இன்று அரசு விழாவாக இது கொண்டாடப்படுகிறது.
இந்த வருட விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் என பல்வேறு விவிஐபிகள் வருகை தரவுள்ளனர். இதனால் பசும்பொன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8000க்கும் மேற்பட்ட போலீஸார், அதிரடிப் படையினர், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும் பல்வேறு கட்சியினர், தலைவர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.