முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!

Su.tha Arivalagan
Sep 11, 2026,11:24 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


இந்த

முண்டாசுக்  கவிஞன்

எண்ணிலாக்  கவி எழுதி

வரலாறு படைத்தவன்!

 

இவன்

ஆற்றல் கண்டு

ஆங்கிலேயருக்கும்

அச்சம் உண்டு

அடி மனதில் ஆழமாய்...




இவன்

நெருப்பாற்றில்

நீந்தியவன்!

அடிமைத் தளையை

அறுத்தெறிய இவன்

மீசை துடித்ததுண்டு!


இவன் தூரிகை

எழுதத் தொடங்கினால்

ஏழைக்கும் எழுச்சி வரும்!

கோழைக்கும் வீரம் வரும்!


இவன்

வறுமைக்கு

வாழ்க்கைப்  பட்டாலும்

இவன்

வார்த்தைகளில்

பஞ்சம் இல்லை!


இந்த

எட்டயபுரத்து

எழுத்து வேந்தன்

வாழ்ந்தது சில காலம்!


ஆனால்

யுகங்கள் தோறும்

யுகங்கள் தோறும்

இவன் எழுத்து

நிலைத்து நிற்கும்!


இவன்

எழுதாத பொருள் இல்லை!

இவன்

எழுதாதது எழுத்தில்லை!


பாட்டுக்கொரு புலவன்

பாரதியால்  நம்

நாட்டை விட்டு ஓடினான்

ஆங்கிலேயன்!


இவன்

அன்னைத்  தமிழுக்கு

அணி செய்தான்.

அடிமைத் தளையை

உடைத்தெறிந்தான்!


வாழ்க பாரதி!

வாழ்க சுதந்திரம்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)