நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
Aug 21, 2026,11:08 AM IST
-மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
நேற்றல்ல இன்றல்ல
எந்நாளும் உன் நினைவு!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓயாத பல கனவு!
காற்றல்ல கடல் அல்ல
அதுபோல ஒரு பந்தம்!
கார்மேகம் மழை பொழியும்
போலிருக்கும் நம் சொந்தம்
பேச்சல்ல மூச்சல்ல
உனை நினைக்காத பொழுதல்ல!
உடல் அல்ல உயிர் அல்ல
நீ இன்றி நான் அல்ல!
முதல் அல்ல! முடிவல்ல!
நமது பூர்வ ஜென்ம பந்தம்
பல கோடி வருடங்களாய்த்
தொடர்கிறதோ நம் சொந்தம்
அனலாகி மழையாகி
மாறி மாறி வரும் பருவம் அல்ல!
எப்போதும் மாறாத
நம் அன்பை எப்படிச் சொல்ல!
இருக்கின்ற கடவுளை
வணங்குவோம் வா என்னவளே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)