அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளன. எல்லைகளில் பதற்றம் அதிகரித்ததாலும் இந்தியா அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் நடக்கவிருந்த எட்டு போட்டிகள் எமிரேட்ஸில் நடைபெற உள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்துர்" என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்களை அழித்தது. இந்த முகாம்கள் பாகிஸ்தான் மற்றும் POK பகுதியில் இருந்தன.
இதையடுத்து மே 9ஆம் தேதி பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவ பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளங்களை தாக்கவில்லை என்றும் கூறியது. அதேசமயம், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.
வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்கி, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை தடுத்தது. பாகிஸ்தானின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. இந்தியாவில் உள்ள 15 ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறி வைத்ததாகவும், அதை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும் இந்திய அரசு கூறியுள்ளது. மேலும் ஜம்மு சிவில் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ராஜோரி மாவட்டம், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையிலும் வெடி விபத்துக்கள் நிகழ்ந்தன.
இப்படி போர் பதட்டம் அதிகரித்து வருவதால் தற்போது பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளை எமிரேட்ஸுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மாற்றி விட்டது. இதற்கு முன்பு 2016-17ல் PSL போட்டிகள் எமிரேட்ஸில் நடத்தப்பட்டுள்ளன. COVID-19 தொற்றுநோய் காரணமாக 2021 சீசனின் முதல் பாதி அங்கு நடைபெற்றது.
தற்போதைய போர்ப் பதட்டம், பாகிஸ்தானின் கிரிக்கெட்டை கடுமையாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. காரணம் வங்கதேச அணி அணி ஐந்து T20I போட்டிகளில் விளையாடுவதற்காக மே 25 முதல் பாகிஸ்தானுக்கு வர இருந்தது. PSL மே 18ஆம் தேதி முடிவடைவதால், அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வங்கதேச தொடர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.