இந்திய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே .. இன்று நண்பகல் பேச்சு வார்த்தை!

Manjula Devi
May 12, 2025,10:07 AM IST

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது உருவாகியுள்ள போர் சூழல் தாக்குதலை நிறுத்த, இன்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில்  இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக, இந்தியா பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் தக்க பதிலடி கொடுத்தது.அதன்படி  ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு,  எல்லைக்கோடு அருகே உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து  டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான்  நடத்திய தாக்குதலை   வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்தனர். இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.




இதனால் கடந்த சில தினங்களாகவே அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இராணுவப் படையினர் அப்புறப்படுத்தினர்.


தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இரு நாடுகளும் சண்டையை நிறுத்த  ஒப்புக்கொண்டன.

மேலும் பாகிஸ்தான்  அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் எனவும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை நிறுத்த அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை இரு நாடுகளும் கையில் எடுத்துள்ளது. அதில் இந்திய ராணுவம் உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்களின் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.  இந்த பேச்சு வார்த்தையில் அமைதியான சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப் பகுதிகளில் எந்தவித தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.