எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
- வே.தங்கப்பிரியா
சென்னை: எஸ்ஐஆர் படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக மக்களிடையே குமுறல் எழுந்துள்ளது. தேவையில்லாமல் போன் செய்து பேசுவதாகவும் சில புகார்கள் கிளம்பியுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு மட்டுமன்றி மொத்தம் ஒன்பது மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட மூன்று யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்று திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தபோதும் தற்போது இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை வருகிற 11ம் தேதிக்குள் நிரப்பித் தர வேண்டும்.
இந்த பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இதில் பல மோசடிகளும் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதாக கூறி ஓடிபி (OTP) எண்ணை கேட்டு சிலர் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் மக்களுக்கு எச்சரித்து வருகின்றனர். யாராவது போன் செய்து ஓடிபி வரும், கொடுங்கள் என்று சொன்னால் கொடுக்காதீர்கள். அப்படி யாரும் கேட்க மாட்டார்கள். எனவே மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து படிவங்களை வேறு நபர்கள் பெற்று அவற்றை நகலெடுத்து பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. பலர் தங்களது ஆதார் எண்களையும் எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்பியிருப்பதால் அதுவும் ரிஸ்க் ஆகிறது. அந்த எண்ணைப் பயன்படுத்தி சிலர் தவறான முறையில் அதை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உங்கள் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் முகாம்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்த ஒரு படிவத்தையும் தெரியாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வாக்காளர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)