காரைக்குடி அண்ணாமலையார் நகர் பகுதியில் அறிவிக்காத மின்வெட்டுகளால் மக்கள் அவதி

Meenakshi
Sep 06, 2025,04:33 PM IST

காரைக்குடி : சிவகங்கை  மாவட்ட காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


காரைக்குடியில் அவ்வப்போது பெய்யும் சிறுமழை வெயிலை தணிக்காமல் புழுக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் மின் தேவை வழக்கத்தை விட அதிகமாகிறது. தண்ணீருக்கான மோட்டார் தொடங்கி மின்விசிறி, குளிர்சாதன உபகரணங்கள் வரை அதிகமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. 


இந்நிலையில் அறிவிக்கப்படாமல் பல இடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக காரைக்குடியில் அண்ணாமலையார் நகர், பாரி நகர், நாகம்மை நகர்  பகுதிகளில் அதிகளவில் இந்த மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.




மின்வெட்டு ஏற்பட்டு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடுகிறது என்றாலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின் அழுத்த குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின்விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் அவதிப்படுவதோடு அவை பழுதாகியும் விடுவதாக புகார் எழுகிறது. மின்வெட்டு, மின் அழுத்த குறைவு காரணமாக மக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 


குறிப்பாக முதியோரும், குழந்தைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மாதந்தோறும் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாள் முழுவதுமே மின்சார துண்டிப்பு வழக்கமாக நடக்கும் வேளையில் இன்று அந்த மின்துண்டிப்பு தொடர்பான தகவலும் முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த மின் வெட்டு குறித்து முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.