ஆமதாபாத்தில் விமான விபத்து... விடுதி சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?

Meenakshi
Jun 12, 2025,05:55 PM IST
அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து  லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்களும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஏர் இந்திய விமானம் ஒரு மருத்துவ விடுதியில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில் கருகியது.



அகமதாபாத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகி 625 அடி உயரம் சென்ற நிலையில், திடீரென விமானம் கீழே இறங்கி விழுந்து தீப்பிடித்தது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் தற்போது வரை 133 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், விமானம் விழுந்தது மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி என்று தெரிய வந்துள்ளது. 

இந்த விபத்தில் கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ளதாகவும். மேலும், பலரின் நிலைமை கவலைக்கிடமாக  இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்பகுதியில், மீட்பு பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.