3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் விவகாரத்தில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் கோரியதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. இந்த செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியபோது திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கனடாவில் இருந்தபோது நடைபெற்ற இந்த 35 நிமிட தொலைபேசி உரையாடல் குறித்து புதன்கிழமை காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்த விவரங்களை ட்ரம்ப் கேட்டபோது பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை, விரும்பப்படவில்லை என்றும், இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு என்றும் பிரதமர் மோடி அழுத்தமாக எடுத்துரைத்தார்.
மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை, இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை, எதிர்காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியாவில் முழு அரசியல் ஒருமித்த கருத்து உள்ளது என்றார் மிஸ்ரி.
ஆபரேஷன் சிந்தூர் போர்நிறுத்தத்திற்கு தான்தான் காரணம் என்று ட்ரம்ப் பலமுறை கூறி வருகிறார். இதுதொடர்பாக இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போதைய மோடி - டிரம்ப் பேச்சு நிகழ்ந்துள்ளது.
ஜி7 மாநாட்டின்போது டிரம்ப்பும், பிரதமர் மோடியும் நேரில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இஸ்ரேல் - ஈரான் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் பாதியிலேயே போய் விட்டதால் இந்த சந்திப்பு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.