கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
கோயம்பத்தூர்: கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.
இதற்காக அவர் இன்று மதியம் ஒரு மணிக்கு புட்டபர்த்தியிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு கோவை வந்தடைவார் பிரதமர் மோடி. பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர். பிரதமர் வருகையைத் தொடர்ந்து, கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் எந்த விதமான வாகனங்கள் நிறுத்துவதற்கும் 12 மணி முதல் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்து வெற்றி கண்ட விவசாயிகள் 18 பேருக்கு பிரதமர் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.
மாநாடு, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கி வருகிற 21ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியும் இடம் பெறுகிறது. 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இயற்கை முறையில் விளைந்த விளைபொருள்கள் கண்காட்சி நடைபெறும்.
செய்தி: ஷீலா ராஜன்