களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

Su.tha Arivalagan
Feb 28, 2026,05:30 PM IST

- "பக்தித் தென்றல்" பாவை.பு


மதுரை:  தமிழ்நாடு உள்பட ஜந்து மாநில சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.  அங்கிருந்து நாளை அவர் முதலில் புதுச்சேரிக்கும், பின்னர்  மதுரைக்கும் செல்லவுள்ளார்.


மதுரையில் நாளை நடைப்பெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றிரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.  மார்ச் 1ம் தேதியான நாளை  காலை தனி விமானம் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர் மோடி. 


அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற பின், ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் மதுரைக்குப் புறப்படுகிறார்.  மதுரை விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை திறந்து வைக்கிறார். 




அதேபோல பரமக்குடி-இராமநாதபுரம் நான்கு வழி சாலையையும் காணொளி மூலமாக திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய திருக்கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


திருப்பரங்குன்றம் கோவில் தரிசனத்தை முடித்த பின்னர், அவனியாபுரம் அருகே உள்ள மண்டேலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதற்காக மண்டேலா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. 


இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. ஏற்கனவே அவர் மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றதால் நாளைய மதுரைப் பேச்சும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


பிரதமர் மதுரை வரும்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடைப்பெறும் என்று தமிழக பாஜக அறிவித்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


விழாக்கோலத்தில் மதுரை


பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மதுரை நகரமே தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைப்பெறும் இடத்திலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பொது மக்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் கடந்த மூன்று நாடுகளாக மதுரையில் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். முருகன் கோயிலில் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட போலிசார் ஈடுப்பட்டுள்ளனர். 


தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம்


மறுபக்கம், இந்நிலையில் இன்று சென்னை வரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அதிமுகவிடம் தொகுதி பங்கிடு குறித்து இறுதி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பாஜக தங்களுக்கு சாதகமாக உள்ள 30 இடங்களை தேர்வு செய்து அப்பட்டியலைக் கொடுத்து, அதை ஒதுக்கக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதில் முக்கியமாக சென்னையில், விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோவை வடக்கு, சிதம்பரம், திருச்செங்கோடு, கன்னியாகுமரி, மதுரை மேற்கு உள்ளிட்டவை அடங்கும்.  பல தொகுதிகள் கொங்கு மண்டலத்திற்குட்பட்டவையாக உள்ளன.


பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மதுரையில் தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இக்கூட்டம் மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாட்டில் 2வது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.