கேரளாவின் விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Su.tha Arivalagan
May 02, 2025,01:00 PM IST

டெல்லி:  கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.


இது இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்தத் துறைமுகம் Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ) மூலம் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்து பொது-தனியார் மாதிரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. சுமார் ரூ. 8,900 கோடி செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் வணிக ரீதியான செயல்பாட்டிற்கு அனுமதி கிடைத்தது. இந்த ஆழ்கடல் துறைமுகம் உலகளாவிய கப்பல் மற்றும் வர்த்தக பாதைகளில் இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




விழிஞ்ஞம் துறைமுகம் கேரளாவிற்கும், நாட்டிற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர். "ஒரு பக்கம் வாய்ப்புகள் நிறைந்த பெரிய கடல் உள்ளது. மறுபக்கம் அழகான இயற்கை உள்ளது. இதன் நடுவே விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமைந்துள்ளது. இது புதிய யுகத்தின் வளர்ச்சியின் அடையாளம்" என்று அவர் கூறினார்.


விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும் என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.


இந்த துறைமுகத்தின் ஆழம் சுமார் 20 மீட்டர். இது உலகின் பரபரப்பான கடல் வர்த்தக பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் பலப்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பிரத்யேக கொள்கலன் மாற்று துறைமுகம்.