அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விரைவில் சந்திக்க பிரதமர் மோடி திட்டம்.. பிரச்சினைகள் தீருமா?
டெல்லி: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் சில பிரச்சனைகள் இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் Quad தலைவர்கள் மாநாடு நடக்க வாய்ப்புள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்றார் அவர்.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அமெரிக்க அதிகாரி கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் நட்பாக இருக்கிறார்கள். இதனால் இருதரப்பு உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி மற்றும் டிரம்ப் சந்திப்பு எப்போது நடைபெறும் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடைபெறும் என்று அதிகாரி தெரிவித்தார். "அவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்குள் நல்ல நட்பு உள்ளது. Quad மாநாடு நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த வருடம் முடியாவிட்டால், அடுத்த வருடம் மாநாடு நடக்கும். அதற்கான தேதிகளை முடிவு செய்து வருகிறோம். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிறைய விஷயங்கள் நடக்க உள்ளன. தொடர்ந்து நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அந்த அதிகாரி கூறினார்.
Quad மாநாடு என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டமைப்பு மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.