ஜி 20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி 3 நாள் தென் ஆப்பிரிக்கா பயணம்!

Su.tha Arivalagan
Nov 21, 2025,11:27 AM IST

அ.கோகிலா தேவி


டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.


தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இம் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.


ஜோகன்னஸ்பர்க் மாநாட்டில், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.  இதில் இந்தியாவின் கருத்துக்களையும், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி விளக்கிப் பேசவுள்ளார். 




இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.  குறிப்பாக இந்தியா பிரேசில் - தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 


தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனத்தவருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


(அ.கோகிலா தேவி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்தமிழ் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்)