தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
சென்னை: சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3-ம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனிச் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு விரைந்து செல்லும் அவர், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
புதுச்சேரி மாநிலத்தின் தேர்தல் முக்கியத்துவத்தைக் கருதி இந்தப் பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது. பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரவு மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
ஏப்ரல் 4-ம் தேதி காலை பிரதமரின் நிகழ்ச்சிகள் சென்னையில் விறுவிறுப்பாகத் தொடங்குகின்றன. காலையில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 150 முக்கிய பிரமுகர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசுகிறார். இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள், முக்கிய சமூகத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் சிகர நிகழ்ச்சியாக, சென்னை தி.நகர் தொகுதியில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட ரோடு ஷோ நடைபெறுகிறது. பாண்டி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் செல்லும் இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தனது பிரச்சாரத் திட்டங்களை முடித்த பிறகு, ஏப்ரல் 4-ம் தேதி மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனிச் சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி கொச்சி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஜி.என். செட்டி சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.