Operation Sindoor Debate: லோக்சபாவில் அனல் பறக்கும் வாதம்.. இன்று மாலை பிரதமர் பதிலுரை!

Su.tha Arivalagan
Jul 29, 2025,10:28 AM IST

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று முதல் அனல் பறக்கும் பேச்சுக்கள் நடந்து வரும் நிலையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளிக்கவுள்ளார்.


பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நமது பாதுகாப்புப் படைகள் எடுத்தன. அதன்படி பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதிகளிலும் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து நமது படையினர் நடத்திய தாக்குதலில் பல முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.




இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான போரை தான் தான் தடுத்து நிறுத்தி மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தான் சொன்ன பிறகே இரு நாடுகளும் போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்தும் வருகிறது. ஆனாலும் டிரம்ப் நிறுத்தவில்லை. தொடர்ந்து பேசி வருகிறார்.


இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளே விவாதத்தில் அனல் பறந்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரைக்குப் பதில் விவாதத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினர் காரசாரமான கேள்விகளை எழுப்பி பேசியதால் கூட்டத்தில் அனல் பறந்தது.


இந்த நிலையில் இன்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றவுள்ளார். அதன் பின்னர் மாலையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றவுள்ளார். பிரதமர் ஆற்றப் போகும் உரை மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.