மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி.. 3 கூட்டங்கள்.. அதிரடி வெயிட்டிங்!
- பக்தித்தென்றல் பாவை.பு
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிற சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதத்தில் மொத்தம் 3 முறை தமிழகம் வரவுள்ளதாக தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் முதலிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் மாதம் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளார். மார்ச் மாதம் 1 ஆம் தேதி மதுரையில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றும் பிரதமர் மோடி, அன்றைய நிகழ்ச்சியின் நிறைவாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
மதுரை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பிரதமர் வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனைத்தொடர்ந்து மார்ச் 7 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி வேலூரிலும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்திற்காகவும் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதன் பின்னர் மார்ச் 11 தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் விஜயம் செய்யவுள்ள மதுரை, திருச்சி மற்றும் வேலூரில் நடக்கவிருக்கும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடைப்பெற்றது வருவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதற்கு முன் சென்ற ஜனவரி மாதம் 23 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இனைந்து மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டின. இக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து தனது முதல் தேர்தல் பிரச்சார மாநாட்டை தமிழகத்தில் தான் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
பாஜகவுக்கு பெரும் சவாலாக இருப்பது தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம்தான்... இவ்விரு மாநிலங்களின் வெற்றியை முக்கிய இலக்காகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது பாஜக தலைமை. இந்த முறை இந்த இரு மாநிலங்களையும் கைப்பற்றுவதில் அது தீவிரமும் காட்டி வருகிறது. இதனால்தான் கூட்டணியையும் கூட அது விரிவாக கட்டமைத்து வருகிறது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இணைந்து வலு சேர்த்துள்ளனர். தேமுதிக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது திமுகவுக்குப் போய் விட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை மூலம் பாஜக கூட்டணிக்கு மிகப் பெரிய பூஸ்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காரணம் காட்டித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்தது திமுக. இந்த முறை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அந்த மருத்துவமனையை பிரதமர் கையால் பாஜக திறக்கத் திட்டமிட்டிருப்பது பாஜகவின் அதிரடி வியூகமாக பார்க்கப்படுகிறது.