இந்தியாவை உலுக்கிய.. ஏர்இந்தியா விமான விபத்து.. அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி வருகை

Su.tha Arivalagan
Jun 13, 2025,10:57 AM IST

அகமதாபாத்: சமீப காலங்களில் நிகழ்ந்த மிகப் பெரிய விமான விபத்துக்களில் ஒன்றாக மாறி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டார். மேலும் மருத்துவமனையில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார்.


அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த, 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். விமானம் கீழே விழுந்து நொறுங்கியபோது, கிடைத்த விமானப் பிளவின் வழியாக கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார்.


இந்த நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு வந்த பிரதமர் மோடி, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து நேரடியாக மேகனினகர் பகுதியில் உள்ள விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார். அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் உடன் சென்றார்.




12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றிய பிரதமர் மோடி, இந்தத் துயரச் சம்பவம் குறித்து நேற்று கருத்து தெரிவிக்கையில், மனம் உறைந்து போனேன். இந்தத் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன் என்று கூறியிருந்தார்.


முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜரபு ஆகியோர் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். விபத்து குறித்து உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக அமைச்சர் கின்ஜரபு தெரிவித்தார்.


முன்னதாக விபத்துக்குள்ளான விமானம், அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில நொடிகளிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் மட்டுமே இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளார்.


விமானம் பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உயரத்தைக் குறைத்து, மேகனினகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால், கருப்புப் புகை மண்டலம் வானில் பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானம் புறப்பட்ட உடனேயே, விமானி "மேடே" (Mayday) என்ற முழு அவசரகால அழைப்பை விடுத்ததாக அகமதாபாத் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மையம் தெரிவித்தது.


கிடைத்த காட்சிகளின் அடிப்படையில், இரண்டு என்ஜின்களிலும் உந்துவிசை இல்லாமை மற்றும் பறவை மோதியது போன்றவை விபத்தின் சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விரிவான விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரிய வரும்.