முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வாழ்த்துவதில் முந்திய பிரதமர் மோடி.. லேட்டாக வந்த ராகுல் காந்தி!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காலையிலேயே வாழ்த்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மிகவும் தாமதமாக வாழ்த்து தெரிவித்ததாக சலசலப்பு கிளம்பியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில் தேசிய அரசியலின் முக்கியப் புள்ளிகளான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் ராகுல் காந்தி ஆகியோரின் வாழ்த்துகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
வாழ்த்துவதில் வேகம் காட்டிய பிரதமர்
வழக்கமாக தமிழக அரசியலில் ஆளும் தரப்பிற்கும் மத்திய அரசிற்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில் பிரதமர் மோடி எப்போதும் முன்னிலை வகிக்கிறார். இன்று காலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதள பக்கங்களில் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீடித்த ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் பதிவிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் காலை 9.30 மணிக்கு பிரதமருடைய வாழ்த்துச் செய்தி வந்திருந்தது.
தாமதமான ராகுல் காந்தியின் வாழ்த்து
அதேசமயம், திமுகவின் மிக நெருங்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவிப்பதில் சற்றுத் தாமதம் காட்டியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி காலையிலேயே வாழ்த்துக் கூறிய நிலையில், ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்தி பிற்பகலில்தான் வந்துள்ளது.
1.34 மணியளவில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலினைத் தனது அன்புச் சகோதரர் எனக் குறிப்பிடவும் அவர் தவறியுள்ளார். கடந்த வருட வாழ்த்தில் எனது அன்புச் சகோதரர் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தேசியத் தலைவர்களின் இந்த வாழ்த்துப் பரிமாற்றங்கள் வெறும் சம்பிரதாயமாக மட்டும் பார்க்கப்படாமல், கூட்டணிக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட உறவுகளின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடும் நெருக்கடி தருவதாக ஏற்கனவே முனுமுனுப்பு உள்ளது. தவெகவுடனும் காங்கிரஸ் பேசி வருவதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் தாமதமான வாழ்த்தும், சகோதரர் என்று அவர் குறிப்பிடத் தவறியதும் பேசு பொருளாகியுள்ளது.
இது தற்செயலா அல்லது ஏதேனும் குறியீடா என்று தெரியவில்லை.