பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

Meenakshi
Feb 06, 2026,02:35 PM IST

மதுரை: மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் 28ம் தேதி நடக்க இருந்த பிரதமர் மோடியின்  பொதுக்கூட்டம் மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பிப்ரவரி 28-ம் தேதி மதுரைக்கு வருவதாக இருந்த அவரது திட்டம், தற்போது மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.




தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மார்ச் 1ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


சமீபத்தில் ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர், தற்போது தென் தமிழகத்தில் இந்த மாற்றப்பட்ட தேதியில் தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.