பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!

Su.tha Arivalagan
Jun 24, 2026,11:49 AM IST

விழுப்புரம்:பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமாக) நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி அம்மாள் ஆகியோரின் 61-ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அவர்களது மகனும் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.


தைலாபுரம் இல்லத்தில் சந்திப்பு:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளது. பாமாக நிறுவனரின் இல்லமான தைலாபுரம் தோட்டம் எப்போதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் மற்றும் கட்சி நிகழ்வுகளின் மையப்புள்ளியாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று அங்கு முற்றிலும் ஒரு குடும்ப விழாவாகவும், நெகிழ்ச்சியான தருணமாகவும் இந்த சந்திப்பு அமையவுள்ளது.


61-ஆவது திருமண நாள்:




மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியினர் தங்களது 61-ஆவது திருமண ஆண்டைக் கொண்டாடுகின்றனர். அறுபது ஆண்டுகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று, பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் முன்மாதிரியாகத் திகழும் இந்த மூத்த தம்பதியினரை வாழ்த்தி ஆசி பெறுவதற்காக அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியினருக்கு தங்களது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் அன்புமணி இன்று, நீண்ட நாட்களுக்கு பிறகு தைலாபுரம் வீட்டிற்கு சென்று, தனது தந்தையை சந்திக்க உள்ளார். கட்சியில் யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல், கோர்ட் வரை சென்றுள்ளது. பாமக கட்சியும், மாம்பழ சின்னமும் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் அன்புமணி தனியாக பிரிந்து சென்று, அவர் தலைமையில் ஒரு பாமக அணி இயங்கி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தார் அன்புமணி. இதன் காரணமாக அதிமுக அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை ஒதுக்கியது. அதோடு அவரது மனைவி செளமியா அன்புமணிக்கு தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கப்பட்டது. 


சமீபத்தில் அன்புமணி எம்.பி.,யாகவும், அவரது மனைவி செளமியா அன்புமணி தமிழக சட்டசபையில் எம்எல்ஏ.,வாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். எம்எல்ஏ ஆன பிறகு சட்டசபையில் செளமியா பேசும் பேச்சுக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. ஆனால் சட்டசபை தேர்தலில் சசிகலாவுடன் தனியாக கூட்டணி வைத்து, ராமதாஸ் தலைமையிலான அணி போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு தந்தை-மகன் சந்திப்பு நிகழ உள்ளதால் அரசியல் களத்தின் கவனம் முழுவதும் தற்போது தைலாபுரம் நோக்கி திரும்பி உள்ளது.


இந்த சந்திப்பின் போது தந்தை-மகன் இருவர் இடையேயான மனக்கசப்புகள் நீங்க வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி ஒன்றுபட்ட பாமக.,வாக கட்சி மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


இன்று தைலாபுரம் இல்லத்தில் நடைபெறவிருக்கும் இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்தும் தந்தை-மகன் இடையே ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.