பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
தருமபுரி: பாமக செயல் தலைவராக ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே கருத்து மோதல்களும், கட்சி மோதல்களும் இருந்து வருகிறது. இது சாதாரண பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று பாமக கட்சியை சேர்ந்தவர்கள் எண்ணி வந்தனர். ஆனால் இந்த மோதல் வழுவடைந்து வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, அன்புமணி கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கு அன்புமணி விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணியோ எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் செயல் தலைவர் பதவியில் இருந்தும் நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தருமபுரியில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் ,அவரது மகள் காந்திமதி மற்றும் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி , பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய ராமதாஸ் செயல் தலைவர் என்று பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் எனவே அந்தப் பொறுப்பை என்னுடைய பெரிய மகள் ஸ்ரீகாந்திமதிக்கு வழங்குகிறேன் என்று தெரிவித்தார். மேலும், காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஸ்ரீகாந்திமதியும், இந்த பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது, தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.